சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
Selected thirumurai | thirumurai Thalangal | All thirumurai Songs |
Thirumurai |
1.118
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
சுடுமணி உமிழ் நாகம் சூழ்தர பண் - வியாழக்குறிஞ்சி (திருப்பருப்பதம் (ஸ்ரீசைலம்) பருப்பதேசுவரர் பருப்பதமங்கையம்மை) Audio: https://www.youtube.com/watch?v=70GGL3BPf4w |
4.058
திருநாவுக்கரசர்
தேவாரம்
கன்றினார் புரங்கள் மூன்றும் கனல்-எரி பண் - திருநேரிசை:காந்தாரம் (திருப்பருப்பதம் (ஸ்ரீசைலம்) பருப்பதேசுவரர் மனோன்மணியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=q21t0hnipwo |
7.079
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
மானும், மரை இனமும், மயில் பண் - நட்டபாடை (திருப்பருப்பதம் (ஸ்ரீசைலம்) பருவதநாதர் பருவதநாயகியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=DlIzx0Fux38 |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1.118  
சுடுமணி உமிழ் நாகம் சூழ்தர
பண் - வியாழக்குறிஞ்சி (திருத்தலம் திருப்பருப்பதம் (ஸ்ரீசைலம்) ; (திருத்தலம் அருள்தரு பருப்பதமங்கையம்மை உடனுறை அருள்மிகு பருப்பதேசுவரர் திருவடிகள் போற்றி )
சுடுமணி உமிழ் நாகம் சூழ்தர அரைக்கு அசைத்தான்; இடு மணி எழில் ஆனை ஏறலன், எருது ஏறி; விடம் அணி மிடறு உடையான்; மேவிய நெடுங்கோட்டுப் படு மணிவிடு சுடர் ஆர் பருப்பதம் பரவுதுமே. | [1] |
நோய் புல்கு தோல் திரைய நரை வரு நுகர் உடம்பில் நீ புல்கு தோற்றம் எல்லாம் நினை-உள்கு, மட நெஞ்சே! வாய் புல்கு தோத்திரத்தால், வலம்செய்து, தலைவணங்கி, பாய் புலித்தோல் உடையான் பருப்பதம் பரவுதுமே. | [2] |
துனி உறுதுயர் தீரத் தோன்றி ஓர் நல்வினையால் இனி உறுபயன் ஆதல் இரண்டு உற மனம் வையேல்! கனி உறு மரம் ஏறிக் கருமுசுக் கழை உகளும், பனி உறு கதிர் மதியான், பருப்பதம் பரவுதுமே. | [3] |
கொங்கு அணி நறுங் கொன்றைத் தொங்கலன், குளிர்சடையான், எங்கள் நோய் அகல நின்றான் என, அருள் ஈசன் இடம் ஐங்கணை வரிசிலையான் அநங்கனை அழகு அழித்த பைங்கண் வெள் ஏறு உடையான்-பருப்பதம் பரவுதுமே. | [4] |
துறை பல சுனை மூழ்கி, மலர் சுமந்து ஓடி, மறை ஒலி வாய் மொழியால், வானவர் மகிழ்ந்து ஏத்த, சிறை ஒலி கிளி பயிலும், தேன் இனம் ஒலி ஓவா, பறை படு விளங்கு அருவிப் பருப்பதம் பரவுதுமே. | [5] |
சீர் கெழு சிறப்பு ஓவாச் செய்தவ நெறி வேண்டில், ஏர் கெழு மட நெஞ்சே! இரண்டு உற மனம் வையேல்! கார் கெழு நறுங்கொன்றைக் கடவுளது இடம், வகையால் பார் கெழு புகழ் ஓவா, பருப்பதம் பரவுதுமே. | [6] |
புடை புல்கு படர் கமலம் புகையொடு விரை கமழ, தொடை புல்கு நறுமாலை திருமுடி மிசை ஏற, விடை புல்கு கொடி ஏந்தி, வெந்த வெண் நீறு அணிவான்- படை புல்கு மழுவாளன்-பருப்பதம் பரவுதுமே. | [7] |
நினைப்பு எனும் நெடுங்கிணற்றை நின்று நின்று அயராதே மனத்தினை வலித்து ஒழிந்தேன்; அவலம் வந்து அடையாமை, கனைத்து எழு திரள் கங்கை கமழ் சடைக் கரந்தான்தன்- பனைத்திரள் பாய் அருவிப் பருப்பதம் பரவுதுமே. | [8] |
மருவிய வல்வினை நோய் அவலம் வந்து அடையாமல்,- திரு உரு அமர்ந்தானும், திசைமுகம் உடையானும், இருவரும் அறியாமை எழுந்தது ஒர் எரி நடுவே பருவரை உற நிமிர்ந்தான் பருப்பதம் பரவுதுமே. | [9] |
சடம் கொண்ட சாத்திரத்தார் சாக்கியர், சமண்குண்டர் மடம் கொண்ட விரும்பியராய் மயங்கி, ஒர் பேய்த்தேர்ப் பின் குடம் கொண்டு நீர்க்குச் செல்வார் போதுமின்! குஞ்சரத்தின் படம் கொண்ட போர்வையினான் பருப்பதம் பரவுதுமே. | [10] |
வெண் செ(ந்) நெல் விளை கழனி விழவு ஒலி கழுமலத்தான், பண் செலப் பல பாடல் இசை முரல் பருப்பதத்தை, நன் சொலினால் பரவும் ஞானசம்பந்தன், நல்ல ஒண் சொலின் இவைமாலை உரு எண, தவம் ஆமே. | [11] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
4.058  
கன்றினார் புரங்கள் மூன்றும் கனல்-எரி
பண் - திருநேரிசை:காந்தாரம் (திருத்தலம் திருப்பருப்பதம் (ஸ்ரீசைலம்) ; (திருத்தலம் அருள்தரு மனோன்மணியம்மை உடனுறை அருள்மிகு பருப்பதேசுவரர் திருவடிகள் போற்றி )
கன்றினார் புரங்கள் மூன்றும் கனல்-எரி ஆகச் சீறி, நின்றது ஓர் உருவம் தன்னால் நீர்மையும் நிறையும் கொண்டு(வ்), ஒன்றி ஆங்கு உமையும் தாமும், ஊர் பலி தேர்ந்து, பின்னும் பன்றிப் பின் வேடர் ஆகி, பருப்பதம் நோக்கினாரே. | [1] |
கற்ற மா மறைகள் பாடிக் கடை தொறும் பலியும் தேர்வார் வற்றல் ஓர் தலை கை ஏந்தி, வானவர் வணங்கி வாழ்த்த, முற்ற ஓர் சடையில் நீரை ஏற்ற முக்கண்ணர்-தம்மைப் பற்றினார்க்கு அருள்கள் செய்து, பருப்பதம் நோக்கினாரே. | [2] |
கரவு இலா மனத்தர் ஆகிக் கை தொழுவார்கட்கு என்றும் இரவில் நின்று எரி அது ஆடி இன் அருள் செய்யும் எந்தை மருவலார் புரங்கள் மூன்றும் மாட்டிய நகையர் ஆகி, பரவுவார்க்கு அருள்கள் செய்து, பருப்பதம் நோக்கினாரே. | [3] |
கட்டிட்ட தலை கை ஏந்தி, கனல்-எரி ஆடி, சீறி, சுட்டிட்ட நீறு பூசி, சுடு பிணக்காடர் ஆகி, விட்டிட்ட வேட்கையார்க்கு வேறு இருந்து அருள்கள் செய்து பட்டு இட்ட உடையர் ஆகி, பருப்பதம் நோக்கினாரே. | [4] |
கையராய்க் கபாலம் ஏந்தி, காமனைக் கண்ணால் காய்ந்து மெய்யராய், மேனி தன் மேல் விளங்கு வெண் நீறு பூசி, உய்வராய் உள்குவார்கட்கு உவகைகள் பலவும் செய்து பை அரா அரையில் ஆர்த்து, பருப்பதம் நோக்கினாரே. | [5] |
வேடராய், வெய்யர் ஆகி, வேழத்தின் உரிவை போர்த்து(வ்) ஓடராய், உலகம் எல்லாம் உழி தர்வர், உமையும் தாமும்; காடராய், கனல் கை ஏந்தி, கடியது ஓர் விடை மேற் கொண்டு பாடராய், பூதம் சூழ, பருப்பதம் நோக்கினாரே. | [6] |
மேகம் போல் மிடற்றர் ஆகி, வேழத்தின் உரிவை போர்த்து(வ்) ஏகம்பம் மேவினார் தாம்; இமையவர் பரவி ஏத்த, காகம்பர் கழறர் ஆகி, கடியது ஓர் விடை ஒன்று ஏறி, பாகம் பெண் உருவம் ஆனார்-பருப்பதம் நோக்கினாரே. | [7] |
பேர் இடர்ப் பிணிகள் தீர்க்கும் பிஞ்ஞகன்; எந்தை; பெம்மான்; கார் உடைக் கண்டர் ஆகி, கபாலம் ஓர் கையில் ஏந்தி, சீர் உடைச் செங்கண் வெள் ஏறு ஏறிய செல்வர்-நல்ல பாரிடம் பாணி செய்யப் பருப்பதம் நோக்கினாரே. | [8] |
அம் கண் மால் உடையர் ஆய ஐவரால் ஆட்டுணாதே உங்கள் மால் தீர வேண்டில் உள்ளத்தால் உள்கி ஏத்தும்! செங்கண் மால் பரவி ஏத்திச் சிவன் என நின்ற செல்வர் பைங்கண் வெள் ஏறு அது ஏறிப் பருப்பதம் நோக்கினாரே. | [9] |
அடல் விடை ஊர்தி ஆகி, அரக்கன் தோள் அடர ஊன்றி, கடல் இடை நஞ்சம் உண்ட கறை அணி கண்டனார் தாம் சுடர்விடு மேனி தன்மேல் சுண்ண வெண் நீறு பூசி, படர் சடை மதியம் சேர்த்தி, பருப்பதம் நோக்கினாரே. | [10] |
Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7.079  
மானும், மரை இனமும், மயில்
பண் - நட்டபாடை (திருத்தலம் திருப்பருப்பதம் (ஸ்ரீசைலம்) ; (திருத்தலம் அருள்தரு பருவதநாயகியம்மை உடனுறை அருள்மிகு பருவதநாதர் திருவடிகள் போற்றி )
மானும், மரை இனமும், மயில் இனமும், கலந்து எங்கும் தாமே மிக மேய்ந்து(த்) தடஞ் சுனை நீர்களைப் பருகி, பூ மா மரம் உரிஞ்சி, பொழில் ஊடே சென்று, புக்கு, தேமாம் பொழில் நீழல்-துயில் சீ பர்ப்பத மலையே. | [1] |
மலைச் சாரலும் பொழில் சாரலும் புறமே வரும் இனங்கள் மலைப் பால் கொணர்ந்து இடித்து ஊட்டிட மலங்கி, தன களிற்றை அழைத்து ஓடியும், பிளிறீயவை அலமந்து வந்து எய்த்து, திகைத்து ஓடி, தன் பிடி தேடிடும் சீ பர்ப்பத மலையே. | [2] |
மன்னிப் புனம் காவல் மடமொழியாள் புனம் காக்க, கன்னிக் கிளி வந்து(க்) கவைக் கோலிக் கதிர் கொய்ய, என்னைக் கிளி மதியாது என எடுத்துக் கவண் ஒலிப்ப, தென் நல் கிளி திரிந்து ஏறிய சீ பர்ப்பத மலையே. | [3] |
மை ஆர் தடங்கண்ணாள் மட மொழியாள் புனம் காக்கச் செவ்வே திரிந்து, ஆயோ! எனப் போகாவிட, விளிந்து, கை பாவிய கவணால் மணி எறிய(வ்) இரிந்து ஓடிச் செவ்வாயன கிளி பாடிடும் சீ பர்ப்பத மலையே. | [4] |
ஆனைக் குலம் இரிந்து ஓடி, தன் பிடி சூழலில்-திரிய, தானப் பிடி செவி தாழ்த்திட, அதற்கு(ம்) மிக இரங்கி, மானக் குற அடல் வேடர்கள் இலையால் கலை கோலி, தேனைப் பிழிந்து இனிது ஊட்டிடும் சீ பர்ப்பத மலையே. | [5] |
மாற்றுக் களிறு அடைந்தாய் என்று மதவேழம் கை எடுத்து, மூற்றித் தழல் உமிழ்ந்தும் மதம் பொழிந்தும் முகம் சுழிய, தூற்றத் தரிக்கில்லேன் என்று சொல்லி(ய்) அயல் அறியத் தேற்றிச் சென்று, பிடி சூள் அறும் சீ பர்ப்பத மலையே. | [6] |
அப்போது வந்து உண்டீர்களுக்கு, அழையாது முன் இருந்தேன்; எப்போதும் வந்து உண்டால், எமை எமர்கள் சுளியாரோ? இப்போது உமக்கு இதுவே தொழில் என்று ஓடி, அக் கிளியைச் செப்பு ஏந்து இளமுலையாள் எறி சீ பர்ப்பத மலையே. | [7] |
திரியும் புரம் நீறு ஆக்கிய செல்வன் தன கழலை அரிய திருமாலோடு அயன் தானும்(ம்) அவர் அறியார்; கரியின்(ன்) இனமோடும் பிடி தேன் உண்டு அவை களித்துத் திரி தந்தவை, திகழ்வால் பொலி சீ பர்ப்பத மலையே. | [8] |
ஏனத்திரள் கிளைக்க(வ்), எரி போல(ம்) மணி சிதற, ஏனல்(ல்) அவை மலைச்சாரல் இற்று இரியும் கரடீயும், மானும், மரை இனமும், மயில் மற்றும், பல எல்லாம், தேன் உண் பொழில்-சோலை(ம்) மிகு சீ பர்ப்பத மலையே. | [9] |
நல்லார் அவர் பலர் வாழ்தரு வயல் நாவல ஊரன் செல்லல்(ல்) உற அரிய சிவன் சீ பர்ப்பத மலையை அல்லல் அவை தீரச் சொன தமிழ் மாலைகள் வல்லார் ஒல்லைச் செல, உயர் வானகம் ஆண்டு அங்கு இருப்பாரே. | [10] |